திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.59 திருக்குடமூக்கு (கும்பகோணம்) பண் - பஞ்சமம் |
அரவிரி கோடனீட லணிகாவிரி யாற்றயலே
மரவிரி போதுமௌவல் மணமல்லிகை கள்ளவிழுங்
குரவிரி சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
இரவிரி திங்கள்சூடி யிருந்தானவன் எம்மிறையே.
|
1 |
ஓத்தர வங்களோடும் ஒலிகாவிரி யாற்றயலே
பூத்தர வங்களோடும் புகைகொண்டடி போற்றிநல்ல
கூத்தர வங்களோவாக் குழகன்குட மூக்கிடமா
ஏத்தர வங்கள்செய்ய இருந்தானவன் எம்மிறையே.
|
2 |
மயில்பெடை புல்கியால மணல்மேல்பட அன்னம்மல்கும்
பயில்பெடை வண்டுபண்செய் பழங்காவிரிப் பைம்பொழில்வாய்க்
குயில்பெடை யோடுபாட லுடையான்குட மூக்கிடமா
இயலொடு வானமேத்த இருந்தானவன் எம்மிறையே.
|
3 |
மிக்கரை தாழவேங்கை யுரியார்த்துமை யாள்வெருவ
அக்கர வாமையேன மருப்போடவை பூண்டழகார்
கொக்கரை யோடுபாட லுடையான்குட மூக்கிடமா
எக்கரை யாருமேத்த இருந்தானவன் எம்மிறையே.
|
4 |
வடிவுடை வாட்டடங்கண் ணுமையஞ்சவோர் வாரணத்தைப்
பொடியணி மேனிமூட வுரிகொண்டவன் புன்சடையான்
கொடிநெடு மாடமோங்குங் குழகன்குட மூக்கிடமா
இடுபடு வானமேத்த இருந்தானவன் எம்மிறையே.
|
5 |
கழைவளர் கவ்வைமுத்தங் கமழ்காவிரி யாற்றயலே
தழைவளர் மாவின்நல்ல பலவின்கனி கள்தயங்குங்
குழைவளர் சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
இழைவளர் மங்கையோடும் இருந்தானவன் எம்மிறையே.
|
6 |
மலைமலி மங்கைபாகம் மகிழ்ந்தானெழில் வையமுய்யச்
சிலைமலி வெங்கணையாற் சிதைத்தான்புர மூன்றினையுங்
குலைமலி தண்பலவின் பழம்வீழ்குட மூக்கிடமா
இலைமலி சூலமேந்தி இருந்தானவன் எம்மிறையே.
|
7 |
நெடுமுடி பத்துடைய நிகழ்வாளரக் கன்னுடலைப்
படுமிடர் கண்டயரப் பருமால்வரைக் கீழடர்த்தான்
கொடுமடல் தங்குதெங்கு பழம்வீழ்குட மூக்கிடமா
இடுமணல் எக்கர்சூழ இருந்தானவன் எம்மிறையே.
|
8 |
ஆரெரி ஆழியானும் மலரானும் அளப்பரிய
நீரிரி புன்சடைமேல் நிரம்பாமதி சூடிநல்ல
கூரெரி யாகிநீண்ட குழகன்குட மூக்கிடமா
ஈரிரு கோவணத்தோ டிருந்தானவன் எம்மிறையே.
|
9 |
மூடிய சீவரத்தார் முதுமட்டையர் மோட்டமணர்
நாடிய தேவரெல்லாம் நயந்தேத்திய நன்னலத்தான்
கூடிய குன்றமெல்லா முடையான்குட மூக்கிடமா
ஏடலர் கொன்றைசூடி யிருந்தானவன் எம்மிறையே.
|
10 |
வெண்கொடி மாடமோங்கு விறல்வெங்குரு நன்னகரான்
நண்பொடு நின்றசீரான் தமிழ்ஞானசம் பந்தனல்ல
தண்குட மூக்கமர்ந்தான் அடிசேர்தமிழ் பத்தும்வல்லார்
விண்புடை மேலுலகம் வியப்பெய்துவர் வீடெளிதே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |